July 29, 2010

இயல்பென இருத்தல்

மறுவினையாற்றாமல், மனதை உற்றுப் பார்க்கும் பொழுதுகளில் எண்ணங்களின் ரகம் காண முடிகிறது; தெள்ளமும் கள்ளமுமாய் வந்துபோய்க் கொண்டுதானிருக்கின்றன.
செயலாக்கம் உறாத வரையில், வக்கிர எண்ணங்களின் உக்கிரம் பொறுக்கமுடிவதாய் இல்லை. வந்துவிழும் எண்ணங்கள் எல்லாம் அப்பழுக்கற்றதாய் இருக்க முடியுமா? காற்றின் நிழல் விழாத நிலத்தரை போல எண்ணங்கள் படியாத மனத்திரை எல்லாப் பொழுதுகளிலும் சாத்தியமா? முடி பிய்த்து, விழி பிதுங்க முழித்துக் கொண்டிருக்கையில், " நல்லதும் கெட்டதும் கலந்த கலவை என்றதன் இயல்புணர்ந்து சலனமற்று இரு " என்று முடிவுரைத்து என்மனப் போராட்டத்தை முடித்துவைத்தவர் எனது ஞானகுரு வசந்த்.


வளியுலவ நிழல் மேவா நிலமென
எண்ண மெழும் மனம் திண்ணமா?

வந்து விழும் எண்ண மெலாம்
கள்ள மிலாத் தெள்ளமென ஒண்ணுமா?

நல்லையும் நொள்ளையும் இயல்பெனத் தெளிந்த
நிச்சலன கலையே நிதர்சன நிலையா?