July 13, 2010

தீதும் நன்றும்

பொதுக்கழிப்பிடங்களில் சிறுநீர் கழித்தபிறகு, கழிவுநீர்மீது காறி உமிழ்ந்துவிட்டு நகர்பவர்களைப்பார்த்திருக்கிறேன் ; அவர்களுள் ஒருவனாகவும் இருந்திருக்கிறேன் .தெறிக்கும் சிறுநீரில் ஒரு துளி நாவில் சுவைக்கப்பட்டதாய் ஒரு பிரம்மைச் சிந்தனையின் வினையாக்கமாய் இருக்கக்கூடுமோ அந்த உமிழ்தல்? ஒரு நுண்கணத்தில், பிரக்ஞைக்குப் புலப்படாமல் உருவாகி, செயலாகிய இந்தச் சிந்தனையின் அருவருப்பு திடுக்கிடலில் உறையச்செய்கிறது.

ஒரு பெருங்கருப்பை போலவும் மனம் எண்ணங்களைப் பிரசவித்துக்கொண்டுதானிருக்கிறது. நன்று தீது என அதை வகுத்தாய்கிறது பகுத்தறிவு.' நன்மை பயக்குமெனின் பொய்மையும் வாய்மையிடத்த' வெனில் எக்காலத்தும், எவ்விடத்தும் திரிபடையாத நன்னெறி எது? நல்லவரென்ற அடையாளம் சிந்தனைகளாலா? செயல்களாலா? யோசனைகளெல்லாம் பரிசுத்தமானவையாக எவருக்கேனும் இருக்கக்கூடுமோ? யாருமற்ற, நேர்மையான தனிமைப்பொழுதில், திரண்டுவிழும் எண்ணக்குவியல்களில் அழுகிய குப்பையின் துர்நாற்றமுமடிக்கத்தானே செய்கிறது! 

காக்கையோ குருவியோ
வேறு ஏதாவதாகவும் இருக்கலாம்.

எச்சமோ ஜீரணிச்ச மிச்சமோ
ஊர்ஜிதம் செய்தல் உடனடியாக சாத்தியமில்லை.

என்றாலும்-

மூக்குநுனியை உறுத்தியபடி இருக்கிறது
மலவாடை ஒன்று.