August 06, 2010

உள் அன்பு

கண்களுக்குப் புலப்படாத கயிற்றால் ஏதாவதொன்றோடு பிணைத்துக்கொள்ளவே என் மனம் விழைகிறது.

உள்ளேயுற்ற பற்றாக்குறையை, வெளியே பற்றி நிறைவாக்கிக்கொள்ள முற்படுகிறது. அந்தக் குறைபற்று, என்மீதே இல்லாமல் போன அன்பாக இருக்கக்கூடும். வாழ்தலில் வெறுப்பும், சக மனிதர்மீதான காழ்ப்பும் உள்ளன்பில்லாததின் வெளிப்பாடாக இருக்கலாம்.

அன்புற்று இருப்பதுதான் எல்லா உயிர்களின் இயல்தன்மையோ? அன்பு பரிமாறிக்கொள்ள ஆளில்லாத பொழுது, உயிரற்ற உடைமைகளைப் பற்றிக்கொண்டு உறவாடுகிறது. உயர்திணையோ, அஃறிணையோ - பற்றுதல் மாறினாலும் அன்பு என்ற பொதுத்திணை மாறுவதாயில்லை; அதுவே எக்காலத்தும், எவ்விடத்தும் திரிபடையாத நன்னெறியோ?

வெளியே வீசிய பாசக்கயிற்றை, தனக்குள்ளேயே திரித்து, திரிவளர்த்து, அன்பை ஏற்றியிருந்தால் அகம் ஒளிபெற்றிருக்கலாம். ஆழ்மனதின் எண்ணப்போக்குகளை ஆய்ந்தறிந்த அறிவு, தன் மனதை வெறுக்காது. தன் மனசை வெறுக்காத, மனதின் பொது இலக்கணங்கள் தெளிந்த அறிவு, எந்த மனதையும் வெறுத்திடாதோ? அன்பு செய்தால், அன்பு செய்தலையும் தனக்குள்ளேயே ஆரம்பித்து வைத்தால், உள்ளிருக்கும் அன்பை வெளியே பரவிக்கிடக்கும் படைப்புகள் யாவுள்ளேயும் ஊடுருவச் செய்தால், எது படைத்ததோ அதையும் அன்போடு அரவணைத்துக்கொண்டால், யாதும் ஊர்தானோ ; யாவரும் கேளிர்தாமோ ; யாவும் அன்புதானோ ?

Love thyself
Love thy neighbour
Love thy God.