March 09, 2015

அன்பும் பண்பும் மிக்க சகோதரிக்கு

வாய்ப்பின் சுடர் தேடி 
ராவோடு ராவாக ஊரைவிட்டு என்னிடம் வந்தார்
வண்ண வெளிச்சமும் நவயுகப் பூச்சும் 
கண்களைக் கூச மயங்கி நின்றார் 
தேடித் திரிந்தார் வளம் கண்டார் வசதி பெற்றார் 

சேதி கேட்ட சுற்றம் சிலர் 
மூட்டை முடிச்சோடு சேர்ந்தே வந்தார் 
வந்தோரை அரவணைத்து உபசரித்தேன் 
வனைந்த விரல்கள் காட்டிய திசையில் 
வளைந்து சென்றேன் 
நிறம் மாறினேன் உருத் திரிந்தேன் 

கூடிச் செழித்தார் ஆடிக் களித்தார் 
உள்ளறைச் சாளரம் அகலத் திறந்து
அக்கம் பக்கம் உறவில் திளைத்தார் 
மயக்கம் தெளிந்து ஒரு நாள் 
புதிதாய்க் கண்விழித்து எனைக் கண்டவர்  
வனப்பு கெட்டதாய்த் திகைத்து நின்றார் 
நெரிசல் தாளாமல் புழுங்கித் தவித்தார் 
சொந்த மண்ணின் சுகந்தம் மூக்கை நமைக்க 
கிளம்பிவிட்டார் இன்று உன்னிடம் சேர 

ஊர் எல்லையில் 
நகராது நிற்கும் பெயர்காட்டி 
அன்புடனே அவரை வரவேற்கட்டும்