November 27, 2013

அப்புக்குட்டியும் குட்டித்தங்கமும்

புதுமணத் தம்பதி கதை

தலைமுனை இழுத்தால் காலைக் கடிக்கிறது.
காலைக் காப்பாற்றினால் கடிபடுது என்காது.
கொசுக்கள் களவாடிய தூக்கம்
தொலைந்துபோன நடுநிசியில்
குட்டைப்போர்வையை சுருட்டியெறிந்துவிட்டு
சுறுசுறுப்பாய் உட்கார்ந்தபடி
புதுமணத் தம்பதிபற்றி
சுடச்சுடக் கதைசொல்கிறேன்.
கவனமாய்க் கேளுங்கள்
கனவான்களே கனவாட்டிகளே!

கடவுள் வாழ்த்து

வீதிநடுவே கொலு வைத்தார்களா
கோவிலில் வைத்தபின்னே சுற்றிலும் வீதிசமைத்தார்களா
எனக் குழம்பும்படி
நடுத்தெருவில் நாயகியாய் வீற்றிருக்கும்
கோட்டூர் எல்லையம்மா!
கோடித் தேங்காய் உடைக்கிறேன் உனக்கு
கோர்ட்டுக்குப் போகாமல் என்னைக் காப்பாற்றம்மா!

பெயர்க் காரணம்

சுவாதியில் பிறந்தவனுக்கு
அப்புக்குட்டி என்பது மனைவி வைத்த பெயர்.
தரணியாளும் நட்சத்திரக்காரிக்கு
குட்டித்தங்கம் என்பது அப்புக்குட்டி சுட்டும்பெயர்.

வீரம்

பொழுதுபோகலை என்று அழுது புலம்பியவளிடம்
கழட்டிய துணியை சுழற்றி வீசிவிட்டு
எடுத்துவாடி என்றதட்டும் அப்புக்குட்டிக்கு

உடன்பிறந்தவர்கள் இரண்டுபேர்.
அழகே உருவான தங்கை ஒருவர்
அருவமே அவ்வப்போது உருவாகும்
பயம் என்பது இன்னொருவர்.

இடப்பெயர்ச்சி


பக்கவாட்டிலிருந்து கிளம்பும் சுவர்கள்
பாதிதிறந்தகதவை முட்டி நிற்கின்றன.
இடப்புறத்தில் ஒரு அலுமினிய வாளி.
உள்ளே கூத்தாடாத குறைகுடத் தண்ணீர்.
நீருண்ட மயக்கத்தில்
வாளிக்குள் நீந்தும் பிளாஸ்டிக் சிறுபாத்திரம்.

வெளியேற எழுந்தால்
கால்பட்டு வாளி கூத்தாடும். நீர் தளும்பும்.
விழித்துக் கொள்ளும் பாத்திரம்
நீந்தத் துவங்கும்.

அறைக்குள் சுற்றிச் சுழல்கின்றன
சிகரெட்டுச் சிந்தனைகள்.
கலைக்க விருப்பமின்றி
கழிவறைக்குள் அமர்ந்திருக்கிறான் அப்புக்குட்டி.
எதிர்பாராது உள்நுழைந்த குட்டித்தங்கத்தின் குரல்
சகலத்தையும் உலுக்கி இடம்பெயர்த்துச் செல்கிறது.


நுட்பம்

நவீன தமிழ்க்கவிதைகள் குறித்த விமர்சன நூலில்
அப்புக்குட்டி ஆழ்ந்திருக்கையில்
ஒருதம்ளர் போதுமா ரெண்டுதம்ளர் போடவா
என்று கேட்டவளிடம்
மிச்சமானாலும் பரவாயில்லை மறுநாள் சாப்பிட்டுக்கலாம்
என்று உபதேசித்துவிட்டு புத்தகத்துள் விழுந்தான்.
விசில்சத்தம் முன்னே வர
சமைத்த பாத்திரத்தைக் காட்டியபடி பின்னே வந்தவள்
கலக்கலாஒண்ணு பண்ணியிருக்கேன்.கண்டுபிடிங்க பார்க்கலாம் என்றாள்.
எட்டிப்பார்த்துவிட்டு
வெள்ளையா சோறு ஜோரா வடிச்சிருக்கே என்றவனிடம்
க்கும். ஒருதம்ளர்போட்டு அளவா பொங்கியிருக்கேன்
என்று முகம்சுழித்து முதுகுகாட்டிப்போனாள்.

நுட்பம் நுட்பம் என்று சொல்வார்களே
உங்களூர்க்கடைகளில் கிடைத்தால்
அப்புக்குட்டிக்கொருகிலோ வாங்கிவாருங்கள் அனுபவசாலிகளே !

கடலைப் புரட்டிய தோணி

மார்மீது தலைசாய்க்கிறாள் மங்கை.
கூந்தலசைத்துப் போகிறது
அவன்நாசிவழி வீசும்தென்றல்.

ஏறித்தாழும் மார்க்கூட்டின்மீது
எழுந்தாடுகின்றன நீரலைகள்.

மென்விரல்கள் அளைய
வியர்வை வழியும் ரோமவுடலில்
சிலிர்த்து விரிகிறதோர் கடற்பரப்பு.

தூளியாட்டும் அலைமீது
கிறங்கிக் கண்ணயரும் சிறுதோணி.

தாங்கிக் கிடந்த கடல்
பின்றையொரு கணத்தில்
கனம் தாளாமல் புரள

கலைந்த தோணியும்
கரை ஒதுங்க

தாவி அணைக்க நீள்கின்றன
புரண்டு படுத்தவனின் கரங்கள்.


மல்லிகை

சேறொடு கழிவும்கலந்து
நாறும் குட்டை
தேங்கிய தெருவோரத்தில்
விரித்த துணிமேல்
குத்துக்காலிட்டு
கொட்டிய மலர்களை
கோர்க்கும் கிழவியிடம்
வாங்கிய மலர்கள்
ஏறும் கூந்தலில்
என்ன வாசம் வீசும்
என்று கேட்டான் அப்புக்குட்டி .

தலை கனக்கிறது எனக்கு
பூ வேண்டாம் என்றாள் குட்டித்தங்கம்.

மழை

தெப்பலாய் நனைந்துவிட்டதற்காக
குட்டித்தங்கத்தைத் திட்டிக் கொண்டிருக்கிறாள் அம்மா.
இடமா இல்லை
நூற்றாண்டுகளாகப் பொழிந்து பழகிய மழைக்கு?
குட்டித் தங்கத்தை நனைக்காமல்
கொஞ்சம் தள்ளிப் பெய்தாலென்ன
குறைந்தா போய்விடும்
என்று மழையைத் திட்டிக் கொண்டிருக்கிறான்
அப்புக்குட்டி.

ஆடி வருது

அடுத்த மாசம் ஆடி வருது
அம்மா வந்து கூட்டிப்போவாங்க
பொக்கென்றுபோன குட்டித்தங்கத்தைப் பார்த்ததும்
பக்கென்றது அப்புக்குட்டிக்கு.

ஆற்றுப்படுத்தினான்.ஆற்றுப்படுத்துகிறான்.
இனி ஆடிமுடியும்வரை ஆற்றுப்படுத்துவான்.

விடைபெறுதல்

ஆடிவந்தாலும் ஆடாமல் வந்தாலும்
மாசத்துக்கு நாளு முப்பதுதானே
அங்கேயிங்கேபேசி அலைபேசியை வைத்தால்
ஓடிப்போய்விடும் வாஸ்தவந்தானே!

அதுவரைக்கும்
இழுத்துப் போர்த்தித் தூங்கப் போகிறேன்.
இவர்கள் திரும்பி வந்ததும்
கதையைத் தொடர்கிறேன்.