January 03, 2014

கவிராயர் எழுதிய வாக்குமூலம்

தன் மனைமாட்சியை 
இருகரங்களால் அள்ளி 
தூக்கமுயன்று தோற்றுப்போய்
மல்லாந்து மோட்டுவளையை
வெறித்திருந்த கவிராயர் 
வெண்தாளொன்றை உருவி 
விறுவிறுவென்று எழுதலானார் 
கீழ்வருமாறு:

ஒரு கவிஞனின் வாக்குமூலம் 

என்னுள் இறைந்து கிடக்கும் 
படிமங்களே குறியீடுகளே 
இலக்கண இலக்கியங்களே 
போலகளே போலிகளே 
அணி தொனிகளே 
ரசவாத இத்யாதிகளே 
வணங்காமுடி விமர்சனங்களே 
வணங்குகுடி வாசிப்புகளே 
பிரசுரம் கண்ட கவிதைகளே 
உடைகாட்டும்  விழாக்களே 
எடைகூட்டும் கண்காட்சிகளே 
திறக்காத பக்கங்களே 
திறந்த துக்கங்களே 
உங்கள்வழி கண்டிராத ஞானமே 
அதை அண்டிவிடத் துடிக்கும் 
நானெனும் ஞானசூனியமே 
இருசெவி திறந்து கேளுங்களேன்                                                              
இன்றுநான் சுமந்துதெளிந்த ஞானத்தை :
மிகுகனம் தூக்கும் மாமள்ளர்க்கும் 
சுயகனம் சுமத்தல் சொப்பணமாம்.

மேலதிகமாய் எழுத, எதுவும் வராமல்,எழுத்தாணியை வீசியெறிந்தார் கவிராயர்.