May 11, 2015

பூசாரி அம்மத்தா

காணாக்கிளைப் பறவை அனுப்பும் குரல் 
உரசி இலை உதிர்க்கும் ஒலியோடு ஜோடியாக  
வெயில்மணம் பூசிப் பைய வரும் மதியக் காற்றின் 
முதுகில் தொற்றிக்கொண்டு வந்திறங்கும் 
அம்மத்தாவின் வீட்டு வாசலில் 

மகனைப் பிரிந்து தொலைவூர் சொந்தவீட்டில் 
தனியாகவே வாழும் அம்மத்தா 
முதுமை தேய்த்த கால்மூட்டுக்கு 
உள்ளங்கையை ஊன்றக் குடுத்து 
சாய்த்தவாறே அம்பலம் சுற்றி 
அஞ்சு முழுத்திங்கள் கண்டுவிட்ட பேரக்குட்டனுக்கு 
அமுதூட்டி திரும்பியிருக்கிறாள் 

மகளிருவரோடு பேரன்பேத்தி மருமகனுக்கு 
விறகடுப்பூதி விருந்தாக்கிப் பரிமாறி
மரமுலுக்கி மண்படிய விழுந்த பப்பாளிகளை 
ஆய்ந்தரிந்து உண்டதுபோக எறிந்த துண்டங்களை 
கொத்திப் பறக்குது அண்டங்காக்கா 

மென்பருத்தி குற்றாடை வருடும்  
கட்டித்தயிர் சருமம் மேலே 
சொர்ணத்தில் செஞ்ச அரைஞாண் 
நெகிழ்ந்திறங்கும் இடுப்போடு 
பஞ்சவர்ணத் தண்டை ஆடும் 
வெள்ளரிக் கால்களைத் தூக்கி 
இளஞ்சிவப்பு இல்பல்லீறு தெரிய 
அம்மணப் புன்னகை காட்டி 
சரியும் குறும்புக் குட்டனை 
இடது கையில் இறுகப்பற்றி 
வலது கையால் மயிற்பீலி விசிறியாட்டும் அம்மத்தா 
கம்பீரமாகவே போஸ் குடுக்கிறாள் போட்டோவுக்கு 

படல் வேய்ந்த தொடியோரம் 
அடிமரத்தில் காய்த்துத் தொங்கும் சக்கை
கனியாகி விடுமாம் வரும் சித்திரைக்கு 

காசுகூட்டி கட்டிய கோயில் 
நடைதிறந்து தீபங்காட்டி 
நெற்றியில் விபூதியிட்டு 
வந்தவர்களை வழியனுப்புகிறாள் பூசாரி அம்மத்தா 

வெப்பம் தணிந்து வீசும் தென்றலுக்கு 
பூத்த செம்பருத்தி சிரிக்கும் செடிக்கருகே 
சந்தன பின்னமதி வளரும் வானத்தை 
தொடியில் மல்லாந்து வெறிக்கும் கிணற்றுக்குள் 
தெறிக்குது ஒருதுளி சந்தோஷம்.