October 07, 2010

காற்றொடு கலப்பேன்

இருட்புதர்
விரவிக் கிடக்கும்
வனம்.

தொங்கும் நாவும்
வளைந்த வாலுமாய்
வெறியோடு உலவுமொரு
விலங்கு.

மெல்லப் பதுங்கி
அங்கிங்கு நோட்டம் விட்டபடி
திருட்டு சுவை ருசிக்கும்
ஒரு பிராணி.

முன்னால் குட்டினால்
பின்னால் கொட்டும்
வன்மத்தோடு திரியும்
ஒரு பூச்சி.
ஏதோவொரு கணத்தில்
முடி உதிர்ந்து
இறகு முளைக்கும்.

சிறகு விரித்து
உயரப் பறப்பேன்.

என்
வனாந்தரத்தின்
ஆதி அந்தரங்களில்
வெளிச்சம் பரப்பி

வான அந்தரத்தில்
மிதந்தபடி
காற்றொடு கலப்பேன்.