September 30, 2010

தூதொடு வந்த மழை


மூச்சு முட்ட
நான் இயற்றிய காதலை
மூட்டை கட்டி அனுப்பி வைக்கிறேன்;

கப்பலாய் நனைந்தே
உன் கரை சேரட்டும்.

கப்பல்
கலைந்து போனாலும்
கவலை இல்லை;

மிதந்து சேரும் தாள்
சுமந்து வரும் என்காதல்.

கரை சேராது-
தாள் கரைந்தாலும்
துன்பம் இல்லை;

வழிந்தோடும் நீரில்
எழுந்தாடும் குமிழில்
என் சுவாசம் இருக்கும்.

நீர்
வடிந்து போனாலும்
விசனம் இல்லை;

காற்றசைக்க-
கிளை பெய்யும் மழையில்
துளியாய் உன்மேல் விழுவேன்.